Wednesday, January 18, 2012

ஒடுக்கம்


நான் அழுவதற்கும்
தயாராயிருக்கிறேன்...!
என் கண்ணீர்
ஒரு சின்னப் பூச்சியின்
தாகத்தையாவது
தணிக்குமெனின்...

நான் அடிபடவும்
சம்மதிக்கிறேன்...!
எந்த ஒரு தாக்கத்துக்கும்
சமனும் எதிருமான
மறுதாக்கம்
இல்லையெனும் பட்சத்தில்...

நான் சிரிப்பதற்குக் கூடத்தயார்
உன் துயரங்கள்
அதன் மூலம் கழுவப்படும்
என்றால்...

ஆனால்..
என் கண்ணீரால்
எந்த ஜீவராசிக்கும்
பயனில்லாமல் போகுமென்பதால்...
நியுட்டனின் விதி
என்றுமே மாறாதிருப்பதால்...
நான் சிரிப்பது
ஒருபோதுமே உனக்கு
சந்தோஷத்தைத் தரப்
போவதில்லை என்பதால்...

நான்
அழாமல்...
அடிபடாமல்...
சிரிக்காமல்...
வாழ்வதற்குப் பழகிவிட்டேன்!

               -தாட்சாயணி-

No comments:

Post a Comment