வானம் துளித்துளியாய்
கீழிறங்கும்
வாய்ப்பான நாளொன்றில்
அதனைப் பற்றிப்பிடித்து
ஏறிப்போக வேண்டும்.....
காலில் மிதிபடும்
அழுக்குகளினின்றும்
விடுபட்டு......!
காற்றிலிருக்கும்
சலனங்களை
வாரிக்கொண்டு போகும்
மணியொலியோடு
மனம் விட்டுப்
பேச வேண்டும்!
தெய்வ ரகசியம்
குறித்து.....!
வார்த்தைகளைக் கரைத்து
ஆற்றில் வீசி.....
அவற்றைத் தேடிக் கவ்வும்
மீன்களின் விளையாட்டை
ரசித்துக்கொண்டிருக்க வேண்டும்!
நேரம் தொலைத்து.....!
-தாட்சாயணி
No comments:
Post a Comment